Sunday, 16 February 2014

நான் அறிந்த விற்பனை வெற்றியாளர்கள்

நான் அறிந்த விற்பனை வெற்றியாளர்கள்

ஜெனின் ஜோஸ்:

இவர் கன்யாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்தவர். தற்போது திருநெல்வேலியில் சொந்த தொழில் செய்து வருகிறார். இவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. மிகவும் துடிப்பான, பெரும் கனவு கொண்ட இளைஞர்.
இவர் செய்த சாதனை என்னை இன்றும் வியக்க வைத்துக் கொண்டு இருக்கிறது. ஒரு தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் இவர் விற்பனை அதிகாரியாக பணியாற்றி வந்தார். மிக குறுகிய காலத்தில் கிளை மேலாளராக பதவி உயர்வு பெற்று மார்த்தாண்டம் என்ற ஊரில் பணியமர்த்தப்பட்டார்.
அவர் பதவி ஏற்றதும், உடனடியாக அணைத்து பணியிடங்களையும் நிரப்பினார். பின்னர் முகவர் சேர்கை நடைபெற்றது. ஒரே மூச்சில் 105 முகவர்களை சேர்த்து அவர்களை தகுதி பெறச் செய்தார். பின்னர் கிளை வணிகம் துவக்கும் ஒரு நாளை தேர்வு செய்து, வணிகம் துவங்கும் முதல் நானில் ஐம்பது லட்சம் பிரிமியம் வசூல் செய்யும் இலக்கை செய்தார். அந்த நாளுக்கு சற்று முன்னரே அவர் இலக்கை நெருங்குவது தெரிந்ததும், தன்னுடைய இலக்கை ஐம்பது லட்சத்தில் இருந்து ஒரு கோடிக்கு உயர்த்தினார்.
ஒரு புது கிளை துவங்கும் முதல் நாள் வணிகம் ஒரு கோடி பிரிமியம் என்பது எப்படிப்பட்ட சாதனை என்பது, ஆயுள் காப்பீட்டுத் துறையில் இருப்பவர்களுக்குத் தெரியும். எனக்குத் தெரிந்தவரையில் ஒருவரும் இந்த சாதனையை செய்யவில்லை.
நாட்கள் நெருங்கியது. வணிகம் துவங்கியது. தான் திட்டமிட்டபடியே ஒரு கோடி பிரிமியம் செலுத்தி ஒரு அற்புதமான சாதனை படைத்தார். இந்த இலக்கினாலும், சாதனையினாலும், யாருக்கெல்லாம் என்ன லாபம் கிடைத்தது என்பதுதான் இங்கு முக்கியம்.
·         அவர் விற்பனை அதிகாரிகள் பத்துப் பேறும் அவர்களது பதவி உறுதிசெய்யும் வணிகத்தை முதல் நாளிலேயே முடித்து இருந்தனர். சம்பள உயர்வும் முதல் நாள் முதலே அடைந்தனர்.
·         அனைத்து முகவர்களும் சேர்ந்து முதல் நாள் வணிகம் மூலம் சுமார் முப்பத்து ஐந்து லட்சம் ரூபாய் கமிஷன் பெற்றார்கள்.
·         சில நூறு வாடிக்கையாளர்கள் காப்பீடு பெற்றார்கள்.
நமக்கான பாடம்: பெரிய இலக்கும், சரியான திட்டமிடுதலும், தெளிவான தலைமையும் அமையப் பெற்றால், உலகம் உம்மை திரும்பிப் பார்க்கும்.

குகன் பொன்னம்பலம்:
இலங்கையில் வணிக மேலாண்மை பட்டம் பெற்று, வாழ்வாதாரத்திற்கு, 2004ம் வருடம் கனடா நாட்டிற்கு குடி பெயர்ந்தார்.
அங்கு ஒரு காப்பீட்டு நிறுவனத்தில் தொலைபேசி அழைப்பாளராக பணியமர்ந்தார்.
காப்பீட்டு வணிக வருமான வாய்ப்பை தெரிந்துகொண்டு, முகவராக மாறினார்.
தன்னுடைய தொலைநோக்குச் சிந்தனையுடன் கூடிய அயராத உழைப்பால் இன்று ஐந்தாயிரம் வாடிக்கையாளர்களுடன், ராயல் பேங்க் ஆப் கனடாவில் ஒரு பிளாட்டினம் முகவராக உள்ளார்.
தற்போது விலை உயர்ந்த சொகுசு கார், இரண்டு சொந்த வீடுகள் கனடாவில் என்று நல்ல வசதியில் இருக்கிறார்.
இவர் என்னுடைய பயிற்சி வீடியோவை வலைதளத்தில் பார்த்துவிட்டு எனக்கு போன் செய்து நண்பரானார். தினந்தோறும் நாங்கள் உரையாடும் பொது, இவருக்கு இருக்கும் உற்சாகம் மற்றும் விற்கும் தொழில் மீது இவருக்கு இருக்கும் தீரா காதல், மேலும் கற்க வேண்டும் என்ற ஆர்வம் என்னை மிகவும் ஆச்சரியப் படுத்துகிறது.
இவருடைய பொழுது போக்கு எல்லாமே புத்தகம், பயிற்சி சொற்பொழிவு கேட்பது, வணிகம் பற்றி சிந்திப்பது என்றே ஆகிவிட்டது. சினிமா, தேவையற்ற நண்பர்கள், தேவையற்ற பழக்கம் ஏதும் இவரிடம் இருப்பதாகத் தெரியவில்லை.
நமக்குப் பாடம்: “கவனச் சிதறல் அற்ற, முற்போக்குச் சிந்தனையுடன், அயராது ஒருவன் உழைத்தால், எவரும் அவருடைய வாழ்வை மாற்றி அமைக்கலாம்”

மைக்ரோ லாப்ஸ் ரமணி:

நான் இவரைப்பற்றி கேள்விப்பட்டு, இவரின் தொலைபேசி எண்னை என் நண்பர் மூலம் பெற்று உரையாடினேன். மிகவும் ஆச்சர்யத்தில் என்னை ஆழ்த்திய நபர்களுள் இவரும் ஒருவர்.
மைக்ரோ லாப்ஸ் என்ற நிறுவனத்தில் சிறு வயதில் விற்பனை பிரதிநிதியாக சேர்ந்து பணியாற்றினார். இவர்தான் அந்த நிறுவனத்தின் சேலம் மாவட்டத்தின் முதல் பிரதிநிதி. இவர் பூஜ்யத்தில்தான் வியாபாரத்தை துவங்கினார்.
தனது அயராத உழைப்பால், இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களின் மொத்த வணிகத்தை விட, இவரது ஒருவருடைய வணிகம் பல வருடங்கள் அதிகமாக இருக்குமாம். அப்படியானால் அவருடைய வருமானமும் உச்சத்தில் தான் இருந்திருக்கும்.
இவர் மிக குறைந்த நாட்களே விடுப்பு எடுத்து இருக்கிறார். கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் அதே நிறுவனத்தில் பணியாற்றினார். இதெல்லாம் ஆச்சரியம் இல்லை. இவரது அன்றாட வேலை என்னை மலைக்க வைத்தது.
தினந்தோறும் மருத்துவர் மற்றும் மருந்துக்கடைகளை இவர் சந்திக்கும் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? தினமும் சுமார் 28 நபர்களை அவர் சந்தித்துள்ளார். மாதம் தோறும் சுமார் 850 நபர்களை அவர் சந்தித்துள்ளார்.
இது மிகவும் அரிதான ஒரு எண்ணிக்கை. அவ்வளவு சாத்திதும், மிகவும் பணிவாக என்னிடம் உரையாற்றியது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம்.


நமக்குப் பாடம்: “தினந்தோறும் என்பது ஒரு மந்திரச்சொல். நமது வேலைகளை தொடர்ந்து கவனச்சிதறல் இன்றி செய்துவந்தால், நம்மை வெல்ல ஒருவராலும் இயலாது”.

No comments:

Post a Comment