Sunday, 16 February 2014

MBA INFORMATION

FOR ALL MBA STUDENTS:
பல நேரங்களில் நமக்கு நடக்கும் ஒரு விஷயம் அல்லது ஒருவர் நம்மிடம் நடந்துகொள்ளும் விதம் நமக்கு புலப்படாமலேயே இருக்கும். அது குழப்பமாகவோ, ஆச்சரியமாகவோ இருக்கும். பலநேரங்களில், வடிவேலுவைப் போல "எங்க இருந்துதான் கெளம்புராய்ய்ங்களோ தெரியலையே" என்று நாமும் புலம்ப வேண்டிவரும்.

ஒருமுறை, விர்ஜின் அட்லாண்டா விமானத்தில் பணியாளர் ஒருவர் என்னிடம் சற்று கடுமையாக நடந்து கொண்டார். எனக்கு காரணம் புரியவில்லை. பின்னர் அவரே வருந்தும் வகையில், அவர் தெரியாமல் என்பேண்டில் சில துளிகள் ஜூசை கொட்டிவிட்டு என்ன செய்வதென்றே தெரியாமல், ஒரு புது பேன்ட்டை கொடுத்து மன்னித்துக்கொள்ள வேண்டினார்.

அவர் கொடுத்த கால் சட்டையை  மறுத்துவிட்டு, அவர் ஆரம்பம் முதலே என்னிடம் கறாராக நடந்து கொண்டது எதனால் என்று மட்டும் கூறும்படி கேட்டேன். எங்கள் குழுவில் இருப்பவர்கள் அடிக்கடி பணிப்பெண்களை போட்டோ எடுக்கிறார்கள் அது தவறு என்று கூறினார். அதனால் தான் அப்படி நடந்து கொண்டதாகவும் சொன்னார். மற்றவர் அப்படிச் செய்வதற்கு நான் என்ன செய்ய முடியும்? (சத்தியமா நான் போட்டோ எடுக்கலீங்க)

இப்படித்தான் நாம் காரணமே தெரியாமல் தலையை சொரிந்துகொள்வோம். இதுவும் ஒரு கயாஸ் தியரி மாதிரித்தான். "ஒரு பட்டாம் பூச்சியின் சிறகடிப்பிற்கும், ஒரு பூகம்பத்திற்கும் தொடர்பிருக்கும்".

இப்படி குழப்பமான நேரங்களில் நாம் அதன் காரணத்தை அறிய முற்பட்டால், நிச்சயம் குழம்பித்தான் போவோம். சரி, இதற்கும் வியாபாரத்திற்கும் என்ன தொடர்பு உள்ளது?

இதன் சுருக்கம் "மதிப்புருவாக்கம்". ஒரு வியாபாரியோ விற்பனையாளரோ, தன்னைப்பற்றிய மதிப்புருவாக்கத்தை தெரிந்தோ தெரியாமலோ செய்துகொண்டே இருக்கிறார்.

நாம் செல்லும் இடங்கள், பழகும் மக்கள், உடுத்தும் உடை, வைத்திருக்கும் வாகனம், நம்மையும் நமது பொருட்களையும் பராமரிக்கும் முறை, வசிக்கும் இடம், இவை எல்லாம் நாம் சந்தித்து பேசத் துவங்கும் முன்னரே, நம்மைப்பற்றி ஒரு அபிப்பிராயத்தை ஏற்ப்படுத்தி இருக்கும். இவ்வகையான அபிப்பிராயங்கள் நல்லதாகவோ அல்லது முரண்பாடாகவோ இருக்கலாம். எனவே கவனம் தேவை.

பல நேரங்களில் இப்படிப்பட்ட முத்திரைகள் நம்மீது குத்தப்பட்டு விடுவது சகஜம். நாம் நமது செயல்களின் மூலம் தொடர்ந்து இப்படிப்பட்ட மதிப்புருவாக்கத்தை செய்து கொண்டுதான் இருக்கிறோம். நம் மீது சமூகத்தின் பார்வை சரியாக இருக்கும்படி செய்தால்தான், நமது உழைப்பிற்கான முழு ஊதியமும் நமக்குக் கிடைக்கும். சிலருடைய ரிங்டோன், காலர்டியூன் கூட இந்த மதிப்புருவாக்கத்தில் பெரும் பங்கு வகிக்கிறது.

பார்ப்பவர்களைக் குற்றம் சொல்லிப் பயனே இல்லை. நாம்தான் கவனமுடன் நடந்துகொள்ள வேண்டும். என்னிடம் விற்பனை மேலாளராக இருந்த ஒருவர் நல்ல விற்பனையாளர். அவரின் வணிகம் சிறப்பாகத்தான் இருக்கும். ஆனால் அவரை நான் வேலைக்கு சேர்த்த சமயம், எனது அலுவலகத்தில் இருக்கும் ஒருவர் அவரைப்பற்றி ஒரு அதிர்ச்சித் தகவலைச் சொன்னார். பல வருடங்களுக்கு முன்னால் அவர் ஒரு பொறுப்பற்ற இளைஞராக இருந்ததையும், போலீசில் அவர் பெயரில் ஈவ் டீசிங் கேஸ் இருந்ததையும் சொன்னார். அவர் வேலைக்கு சேர்ந்த சமயம், அவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகளும் இருந்தன. பல நேரங்களில் இந்த சமுதாயம் ஒருவர் திருந்த அனுமதிப்பதில்லை. முத்திரையை நிரந்தரமாகவே பச்சை குத்த நினைக்கும்.

எனக்கும் தேவையற்ற நட்பு, தேவையற்ற சங்கமம் எல்லாம் இருந்தன. இந்த லேப்ளிங் எனப்படும் மதிப்புருவாக்கத்தைப் பற்றி தெரிந்ததும். ஒவ்வொன்றாக சரி செய்துவிட்டேன். நான் முன்பொரு கட்டுரையில் எழுதியதைப் போல, எனக்கு புத்தகம் படிக்க மட்டும் நேரம் கிடைக்கவில்லை, புத்தகம் எழுதவே நேரம் கிடைத்தது.


"ஒவ்வொரு விற்பனையாளருக்கும், வியாபாரிக்கும், அவர் மீது சமூகத்தின் பார்வை எப்படி உள்ளது என்பதைப் பற்றிய ஒரு விழிப்புணர்வு மிக அவசியம்"

No comments:

Post a Comment